எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 நவம்பர், 2017

மாவிளக்கு.

மாவிளக்கு.

பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன்.

சில இடங்களில் சலிக்காமல் மாவை இடித்து அப்படியே வெல்லம் போட்டுப் பிடித்து நான்கு ஐந்து மாவிளக்குகள் கூட தட்டுகளில் ஏந்தி வருவார்கள்.

இங்கே சட்டியில் வைக்கப்படுகிறது. தட்டில் வைப்பதில்லை. அதற்கென்று மாவிளக்குச் சட்டி என்று ஒன்று வைத்திருப்பார்கள்.

தேவையானவை :-

பச்சரிசி - 1 அல்லது 2 ஆழாக்கு, வெல்லம் - 2 முதல் 4 அச்சு, நெய் - 1 டேபிள் ஸ்பூன் , பஞ்சுத்திரி - 1

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி அரைமணி நேரம் நன்கு ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். இதை வடிக்க இங்கே எல்லாம் சிவப்பு ஓலைக்கொட்டான்கள் என்று வைத்திருப்பார்கள். இன்று சில்வர் அல்லது ப்ளாஸ்டிக் வடிகட்டிகளில் வடிகட்டுகிறார்கள். அதன் பின் அரிசியை பேப்பரில் போட்டு சிறிது உலர விட வேண்டும்

ஈரப்பதம் ஓரளவு இருக்கும்போதே மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். நைஸ் சல்லடையில் சலித்து மிச்ச அரிசியோடு சலித்த கப்பிகளையும் போட்டு திரும்பத் திரும்ப அரைத்துச் சலிக்கவும்.

வெல்லத்தை நைத்து ( நச்சு ) வைத்துக் கொள்ளவும். தூளான வெல்லத்தை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி மாவை சிறிது சிறிதாகத் தூவி விஸ்பரை சுற்றிச் சுற்றி நிறுத்தவும் . மாவை வெளியே எடுத்து மிச்ச மாவோடு சேர்த்து நன்கு கெட்டியாக உருட்டவும்.

வெல்லம் அச்சின் அளவைப் பொறுத்துக் கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும். இல்லாவிட்டால் மாவிளக்கு மாப் பாயாசம் ஆகி விடும்.

இதன் நடுவில் குழி செய்து பஞ்சை நெய்யில் உருட்டி நிறைய நெய் ஊற்றி திரியைப் பதிக்கவும். சாமிக்கு எதிரில் அல்லது கோவிலில் சாமி சன்னிதியின் எதிரில் இதில் விளக்கேற்றி சிறிது நேரம் வைத்திருந்து தேங்காய் உடைத்து வெற்றிலை பாக்கு வைத்து தீபம் காட்டி அதன் பின் உபயோகிக்கவும்.

மறக்காம சாமிக்கு நைவேத்தியம் செய்தபின் தீபம் எரியும்போதே இரண்டு தேங்காய் நார்களாலோ அல்லது அப்பள இடுக்கியாலோ தீபத்தை அப்படியே வெளியே எடுத்து அதற்கென வைக்கப்பட்டிருக்கும் சிமிண்ட் தட்டில் போட்டு விடவும்.

காரைக்குடியில் கார்த்திகை சோம வாரத்தில் குன்றக்குடி முருகனுக்கும், கார்த்திகை வேல் பூசையின் போதும்,  புரட்டாசி சனிக்கிழமைகளில் அரியக்குடி பெருமாளுக்கும் மாவிளக்கு வைக்கும் பழக்கம் உண்டு.

அது போக மகர் நோன்பின்போது குதிரை வாகனத்தில் புறப்படும் கொப்புடையம்மன், சிவன், பெருமாள், திருநெல்லையம்மன் ஆகியோருக்கும் மாவிளக்கு வைத்து வணங்குவார்கள். கோவிலூரிலிருந்து வரும்  திருநெல்லையம்மனுக்கு மாவிளக்கு வைக்கவென்றே மகர்நோன்பு மண்டபம் என்று ஒன்று காரைக்குடியில்  உள்ளது.

லேசாக ஓரங்களில் செந்நிறமான நெய் வாசனையுடன் கூடிய மாவிளக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும்.  அதற்கு பலத்த போட்டி இடுவோம். தேங்காயைக் கீறி அதில் மாவிளக்கை கேக் போலத் துண்டாக வெட்டி வைத்துக் கொடுப்பார்கள். பயங்கர ருசியாயிருக்கும் போங்க :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...