எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 செப்டம்பர், 2014

குமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.RECIPES FOR SENIOR CITIZEN

1. கொடிப்பசலைக்கீரை மசியல்:-
==========================
தேவையானவை..:-
1.கொடிப்பசலைக் கீரை.. ஆய்ந்து கழுவி சுத்தம் செய்தது..:-1 கட்டு
2. பாசிப்பருப்பு:- 1/4 கப்
3. பெரிய வெங்காயம்..:பொடியாக அரிந்தது :- 1/4 கப்
4. பூண்டு தோலுரித்து நசுக்கியது ..:- 2 பல்
5. சீரகம் :- 1 டீஸ்பூன்
6. பச்சை மிளகாய்..:- 1
7. தண்ணீர் :-1/2 டம்ளர்
8. உப்பு:- ருசிக்குத் தேவையான அளவு.

செய்முறை:-
1 . கீரையை பொடியாக நறுக்கி பாசிப்பருப்பு., வெங்காயம்., பூண்டுப் பல்., ரெண்டாக வகிர்ந்த பச்சை மிளகாய்., ஜீரகம்., தண்ணீர் மற்றும் உப்புடன் பிரஷர் பானில் போடவும்..
2. இரண்டு விசில் சத்தம் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.
3. பத்து நிமிடங்களுக்குப் பிறகு பானைத்திறந்து., ஒரு மத்து அல்லது கரண்டியால் மசிக்கவும்.. சாதத்தில் நெய்யும் கீரையும் போட்டு சாப்பிடலாம் அல்லது வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்..

2. காரட் பீன்ஸ் பொரியல்:-
தேவையானவை :-
காரட் - ஒன்று
பீன்ஸ் - 10
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

செய்முறை :-
காரட்டை தோல்சீவி., பீன்ஸையும் காம்பு நறுக்கி கழுவி சதுரங்களாக வெட்டவும்..
அரைவேக்காடாக (ஒரு சவுண்ட் வரும் வரை பிரஷர் பானில் அல்லது மைக்ரோ வேவில்) வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த காய்களை சேர்க்கவும்..
உப்பு தூவி இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்
இது பூண்டு குழம்பு சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏற்றது..

3. இளந்தோசை :-
தேவையானவை :-
இட்லி அரிசி
(வெள்ளைக் கார் (அ) ஐ. ஆர் 20 ) - 2 கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்.
உப்பு - 1 டீஸ்பூன்



செய்முறை :-
அரிசி உளுந்து வெந்தயம் மூன்றும் ஒன்றாகப் போட்டு 4 5 முறை நன்கு கழுவி ஊறவைக்கவும்.
கிரைண்டரில் போட்டு நன்கு மாவாக அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும்.
8 மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் துணியால் தடவி மெல்லிய தோசைகளாக சுடவும். மூடி போட்டு வேக வைத்தால் இளசாக வரும்..
(இன்னும் முழு வெண்மையாக இருக்கணும் இளந்தோசை .. என் படத்தில் சிறிது சிவந்து விட்டது)
இத்துடன் தக்காளிச் சட்னியும்., கறிவேப்பிலை கொத்துமல்லி துவையலும் நன்றாக இருக்கும் .

4. தயிர்சாதம் ;-
தேவையானவை ;-
சாதம் - 1 கப்
தயிர் - 100 மிலி
உப்பு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய்
பொடியாக நறுக்கியது - 1
கறிவேப்பிலை - 1 இணுக்கு
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

தயாரிப்பு :-
சாதத்தை குழைய மசித்து தயிரும் உப்பும் சேர்க்கவும்.
தாளிக்கும் கரண்டியில் எண்ணை காயவைத்து கடுகு., ஜீரகம் போட்டு வெடித்ததும்., பெருங்காயம் சேர்த்து., பச்சை மிளகாய்., கறிவேப்பிலை., இஞ்சி.,
தாளித்து சாதத்தில் கொட்டி நன்கு பிசையவும். உருளை மசாலாவுடன் பரிமாறவும்..

5.முட்டைக்கோஸ் துவட்டல் :-
தேவையானவை :-
முட்டைக் கோஸ் சன்னமாக துருவியது - 250 கிராம்
பெரிய வெங்காயம் நறுக்கியது - 1
பச்சை மிளகாய் வகிர்ந்தது - 1
கறிவேப்பிலை - 1 இணுக்கு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை :-
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., பச்சை மிளகாய்., கறிவேப்பிலை., வெங்காயம் சேர்க்கவும். முட்டைக்கோஸைக்கழுவி சேர்க்கவும்.
1 நிமிடம் வதக்கி உப்பும் சிறிது தண்ணீரும் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை.
இறக்கி சாம்பார் சாதம் அல்லது வத்தக் குழம்பு சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு :- பொதுவாக இந்த வகை துவட்டல் அல்லது பொரியல்களுடன் 1 டேபிள்ஸ்பூன் வேகவைத்த துவரம் பருப்பு அல்லது 1 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்ப்போம். ப்ளைனான செய்து சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மற்றும் அதிக அளவு காய் எடுத்துக்கொள்ள முடியும்.

6.பொறிச்சுக் கொட்டித் தேங்காய்த்துவையல்.
தேவையானவை :-
தேங்காய் துருவியது - 1 கப்
பச்சை மிளகாய் - 3 ( வகிர்ந்தது)
பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 1
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
புளி - 1 இஞ்ச் துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:-
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு போடவும்.
அது வெடித்தவுடன்உளுந்து பெருங்காயம் போடவும். பெருங்காயம் பொறிந்து உளுந்து சிவந்தவுடன் பச்சைமிளகாய்., வெங்காயம் ., கருவேப்பிலை சேர்க்கவும்.
2 நிமிடம் வதக்கி உப்பு புளி சேர்க்கவும்.
தேங்காயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து சூடான குழிப்பணியாரங்கள் அல்லது இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

7.கோதுமை தோசை:-
தேவையானவை:-
கோதுமை மாவு - 1கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கலாம்.
எண்ணெய் - 20 மிலி

செய்முறை :-
கோதுமை மாவில் உப்பு., ஜீரகம்., பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி மாவாக கட்டியில்லாமல் கரைக்கவும்.
விரும்பினால் பொடியாக அரிந்த வெங்காயம் ., கருவேப்பிலை சேர்க்கலாம்.
தோசைகளாக ஊற்றி திருப்பி வைத்து வேகவிட்டு சூடாக., தக்காளித்துவையல் அல்லது மிளகாய்த் துவையலுடன் பரிமாறலாம்..

8.
ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்.:-
தேவையானவை :-
தோசை மாவு - 1 கப் அல்லது
புது தயிர் - 1 கப் + ஆட்டா - 1/2 கப்
பொடித்த ஓட்ஸ் - 1 கப் ( க்விக்கர் (அ) சஃபோலா)
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
தக்காளி - 1 பொடியாக அரிந்தது
காரட் - 1 பொடியாக துருவியது.
பச்சை மிளகாய் - 1 பொடியாக அரிந்தது
கொத்துமல்லி - 1 கைப்பிடி பொடியாக அரிந்தது
கருவேப்பிலை தளிராக - 5 இணுக்கு பொடியாக அரிந்தது.
பொடியாக அரிந்த பீன்ஸ் 2., குடைமிளகாய் 1/4 பாகம்., முட்டைக்கோஸ் சிறிது - விரும்பினால்.
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 20 மிலி
செய்முறை :-
தோசை மாவுடன் ஓட்ஸ் பொடியை சிறிது நீரும் உப்பும் சேர்த்துக் கலக்கவும். அல்லது ஆட்டாவுடன் தயிர்., ஓட்ஸ்பொடியை கட்டிகளில்லாமல் உப்பும் நீரும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ஒரு டேபிள்ஸ்பூன் மாவை ஊற்றவும்.. காய்கறிகளை ஒன்றாக நன்கு கலக்கி ஒரு கைப்பிடி எடுத்து ஊத்தப்பத்தின் மேல் தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும். ஒரு மூடியை போட்டு இரண்டு நிமிடம் வெந்ததும் திருப்பிவிடவும். திரும்ப எண்ணெய் ஊற்றவும். பொன்னிறமானதும் எடுத்து சுட சுட கொத்துமல்லி., கருவேப்பிலை சட்னியுடன் பரிமாறவும். நல்ல கலராக., வாசனையுடன் கூடிய தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கும் ., லன்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பவும்.

9.
பூண்டு சட்னி :-
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெள்ளைப் பூண்டு - 8 பல் உரித்து நறுக்கியது.
உப்பு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் ( விரும்பினால்)
செய்முறை :-
ஒரு மிக்ஸியில் போட்டு 5 செகண்ட் கொரகொரப்பாக அரைத்து ( அல்லது சின்ன குழவிக்கல் இருந்தால் ஒரு கப்பில் இதை எல்லாம் போட்டு இடிக்கலாம்) கப்பில் எடுத்து நல்லெண்ணெய் சேர்க்கவும். சூடான இட்லி., ஊத்தப்பம்., ஓட்ஸ் தோசை., கோதுமை தோசை ., முளைகட்டிய பயறு தோசைகளுடன் பரிமாறலாம்.

10.இனிப்பு இடியாப்பம்..:-
தேவையானவை.;-
இடியாப்ப மாவு - 2 கப் ( அல்லது இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி இடித்து சலிக்கவும். இதை இடியாப்பம் செய்ய உபயோகிக்கவும்)
கொதி நீர் - 2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3 ( பொடித்தது)

செய்முறை :-
இடியாப்பத்தில் கொதி நீரை ஊற்றி நன்கு பிசையவும். இடியாப்ப அச்சில் போட்டு இட்லி குக்கரில் வேக வைத்து உதிர்க்கவும். ஒரு பௌலில் போட்டு சர்க்கரை., துருவிய தேங்காய்., நெய்., ஏலப்பொடி சேர்த்து கிளறி பரிமாறவும்.

இதை காலைப் பலகாரத்துடன் பரிமாறுவார்கள்.. அல்லது தாளித்த இடியாப்பம் கத்திரிக்காய் கோசமல்லியுடனும் பரிமாறலாம்

11,
ஆப்பம்:-
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி ( இட்லி அரிசி) - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை :-
அரிசிகள்., உளுந்து., வெந்தயத்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும். 10 மணி நேரம் புளிக்க விடவும். ஆப்பக்கல்லை எண்ணைத் துணியால் துடைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி கல்லை அடுப்பிலிருந்து எடுத்து அப்படியே ஸ்லாத்தவும். அல்லது சுற்றவும். மாவு எல்லாப் பக்கங்களிலும் சரியாக பரவும்.. அடுப்பில் வைத்து மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும். மூடியை திறந்து ஆப்பத்தை எடுத்து தேங்காய்ப் பால்., அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

ஒரு முழுத்தேங்காயைத் திருகி மிக்சியில் அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து வடிகட்டி ., 2 டேபிள்ஸ்பூன் சீனியும் ., பொடித்த ஏலக்காயும் போடவும்.

12,ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை:-
*****************************************
இட்லி அரிசி - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்
வரமிளகாய் - 4 விதை நீக்கி சின்னதாக வெட்டவும்.
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1/2 டீஸ்பூன்.
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :-
இட்லி அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரப்பாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயம் போட்டு நன்கு வதக்கி மாவை ஊற்றவும். உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு கிளறி கையில் ஒட்டாமல் வரும்போது தேங்காய்த்துருவல் சேர்க்கவும். அடுப்பை அணைத்து மாவை கையால் நன்கு பிசைந்து எலுமிச்சை உருண்டைகளாகவும் பிடி கொழுக்கட்டைகளாகவும் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். சூடாக வெங்காயச் சட்னி., மிளகாய் சட்னி., பொரிச்சுக்கொட்டித் துவையலோடு பரிமாறவும்.

13.
தக்காளி கிரேவி :-

************************

தேவையானவை.:-

தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 2

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்.


செய்முறை :- தக்காளி வெங்காயத்தை சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., அரைத்த கலவையை ஊற்றி உப்பு., மிளகாய்ப்பொடி போடவும்.இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும். சூடாக இட்லி ., தோசை., உப்புமா., கிச்சடியுடன் பரிமாறவும்..

14.
பொரியரிசி மாவு:-

தேவையானவை:-

சிவப்பரிசி/வேங்கரிசி - 1/2 கிலோ

சீனி - 1 கப்

தண்ணீர் - தேவையான அளவு.


செய்முறை:-

அரிசியை நன்கு கழுவி ஒரு கொதி வேகவைத்து வடிக்கவும். வெய்யிலில் ஒரு நாள் முழுவதும் காய விடவும். வெறும் பானில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுக்கவும். பொரிந்ததும் கொட்டி ஆறவிடவும். மிக்ஸியில் பொடித்து சீனி சேர்த்து காற்றுப் புகாத டப்பாக்களில் வைக்கவும்.


தேவையானபோது ஒரு டேபிள் ஸ்பூன் மாவை ஒரு பவுலில் எடுத்து தேவையான நீர் விட்டுக் குழைத்து சாப்பிடவும். தண்ணீருக்குப் பதிலாக சிறிது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் போட்டு பிசறி சாப்பிடலாம். புரை ஏறும்., கவனம். இது இரும்புச் சத்து நிறைந்தது. எங்கள் பாட்டி செய்து தருவார்கள். இது குழந்தைகளுக்கு நல்லது.


கோதுமையிலும் செய்யலாம்.

15.மசாலா ஓட்ஸ்:-
மசாலா ஓட்ஸ் - 1 பாக்கெட்
வெண்ணெய்/ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்
காரட் - 1 பொடியாக நறுக்கவும்.
பட்டாணி - ஒரு கைப்பிடி
தண்ணீர் - 2 கப்.

செய்முறை:-
ஒரு பானில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்க்கவும். அதில் காரட், வெங்காயம் பட்டாணி சேர்த்து பின் மசாலா ஓட்ஸை சேர்க்கவும். நன்கு கிளறவும். 3 நிமிடம் வெந்தபின் கெட்டியாக மினுமினுப்பாக இருக்கும்போது இறக்கி பரிமாறவும்.

16.தேங்காய்ப்பால் கஞ்சி:-

தேவையானவை :-
பச்சரிசி - 1 கப்
தேங்காய்ப்பால் - திக் - 1 கப்
தேங்காய்ப்பால் - தண்ணீர் கலந்தது - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வெள்ளைப் பூண்டு - 10 பல்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி வெந்தயம், பூண்டைச் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிழிந்த தேங்காய்ப் பால் 2 கப் ஊற்றி 3 விசில் சத்தம் வரும்வரை வைக்கவும். பிரஷர் போனதும் திறந்து நன்கு மசித்து உப்பும் முதல் தேங்காய்ப் பாலும் சேர்க்கவும்.

இதை அச்சு வெல்லம் அல்லது ஊறுகாய் அல்லது பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

குறிப்பு:- இது வாய்ப்புண் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
டிஸ்கி :- 16. 10. 2013 தேதியிட்ட குமுதத்தில் என்னுடைய சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு வெளியாகி இருக்கிறது.

3 கருத்துகள்:

  1. இத்தனை . ஐடமும் ஒரே நாளைக்கு சாப்பிட
    முடியாதே??

    ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்று என்று
    செய்து பார்க்கிறேன்.

    பீன்ஸ் காரட் போரியல் எல்லாம் சாப்பிட்டாச்சு.

    அந்த ஆப்பம் ,
    அதை நாளைக்கு ட்ரை பண்ணுவோம் .

    சுப்பு தாத்தா
    www,subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...