எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 அக்டோபர், 2014

ஆனித் திருமஞ்சனம் நிவேதனங்கள். AANITH THIRUMANCHANAM RECIPES

சிவப்பரிசிப் பணியாரம்.

தேவையானவை :-

சிவப்பரிசி  - 2 ஆழாக்கு தலை தட்டி
உளுந்து அதன் மேல் கோபுரமாக வைக்கவேண்டும்.
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

சிவப்பரிசி , உளுந்தைக் கழுவி ஒன்றாக ஊறவைத்து 2 மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து அரைக்கவும். அரை டீஸ்பூன் சீனி சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து எண்ணெயைக் காயவைத்துப் பணியாரங்களாக ஊற்றி எடுத்து மிளகாய்த் துவையலோடு பரிமாறவும்.

2. பிசினரிசிப் புட்டு:-

இனிப்புப் புட்டு :-

தேவையானவை:-

பச்சரிசி – 2 ஆழாக்கு
பாசிப்பருப்பு – ¼ ஆழாக்கு.
பிசினரிசி ( ஜவ்வரிசி ) – ¼ ஆழாக்கு
தேங்காய்த் துருவல் –  1 மூடி
ஜீனி – ¼ ஆழாக்கு
ஏலப்பொடி – 1 சிட்டிகை
நெய் – விரும்பினால் 2 டீஸ்பூன்.

செய்முறை :-
பச்சரிசியை ஊறவைத்து வடிகட்டி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். பிசினரிசியைக கழுவி லேசான தண்ணீரோடு வைக்கவும். பாசிப்பருப்பைப் பதமாக வேக வைக்கவும்.



பிசினரிசியையும் பச்சரிசி மாவையும் கலந்து ஆவியில் வேகவைக்கவும். 10 நிமிடம் வெந்ததும் இறக்கி அதில்  வெந்த பாசிப்பருப்பு, ஜீனி, தேங்காய் ஏலப்பொடி நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

உப்புப் புட்டு :-

பச்சரிசி – 2 ஆழாக்கு
பாசிப்பருப்பு – ¼ ஆழாக்கு
பிசினரிசி – ¼ ஆழாக்கு
தேங்காய்த் துருவல் – 1மூடி
உப்பு – 1/3 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுந்து – ½ டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:-
பாசிப்பருப்பை வெதுப்பி மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைக்கவும். பச்சரிசியை ஊறவைத்து வடிகட்டி அரைத்துச் சலிக்கவும். பிசினரிசியைக் கழுவி பச்சரிசி பாசிப்பருப்போடு பிசறி இட்லிப் பாத்திரத்தில் துணி போட்டு ஆவியில் 10 நிமிடம் வேக விடவும். ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பின் கருவேப்பிலை சேர்த்து வாசமாக வதக்கி புட்டைச் சேர்க்கவும். உப்புத் தூவிக் கிளறி தேங்காய்ப்பூவைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.



3. குறுவை அரிசிப்  பாயாசம்:-

தேவையானவை:-

குறுவை அரிசி - அரை ஆழாக்கு
பால் - 1 லிட்டர்
ஜீனி - 1/2 ஆழாக்கு
ஏலக்காய் - 2
முந்திரி  - 10
திராக்ஷை - 10
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-

குறுவை அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து  குக்கரில் அரை லிட்டர் பாலில் வேகவிடவும். வெந்ததும் இறக்கி மிச்ச பாலையும் சேர்த்து ஜீனி கரையும் வரை காய்ச்சி நெய்யில் முந்திரி திராக்ஷை பொறித்துப் போட்டு ஏலத்தைப் பொடி செய்து போட்டுப் பரிமாறவும்.

4. . கவுனரிசி:-

தேவையானவை:-

கவுனரிசி - 1 ஆழாக்கு
சீனி - 1/2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1/ 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)

செய்முறை:-

கவுனரிசியை சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரின் வேகவைக்கவும்.
வெளியில் எடுத்து நன்கு மசிக்கவும்.
சீனி., துருவிய தேங்காய்., நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

5. வரகரிசிப் பொங்கல்:-

தேவையானவை:-

வரகரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு
முந்திரி – 6

செய்முறை:-

வரகரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி 4 கப் தண்ணீர் ஊற்றி , பாதி சீரகம் , மிளகு , வகிர்ந்த பச்சை மிளகாய் சேர்த்துக் குக்கரில் வேக விடவும். ஆறியதும் இறக்கி உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். எண்ணெயில் உளுந்து , மீதி சீரகம், மிளகு சேர்த்துப் பொறிந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்துப் பொறித்துப் பொங்கலில் போடவும். நெய் சேர்த்துக் கிளறித் தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

6. சாமை அரிசி இனிப்புப் பொங்கல்.

தேவையானவை:-

சாமை அரிசி  –  2 கப்
பாசிப்பருப்பு -  ¼ கப்
கடலைப்பருப்பு – ¼ கப்

பால்  - 5 கப்
ஜீனி – 1 கப்
முந்திரிப்பருப்பு – 10
திராக்ஷை – 10.
நெய் – ¼ கப்
ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:-
பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் சிவப்பாக வெதுப்பவும். சாமை அரிசியையும் பருப்புகளையும் கழுவி குக்கரில் போட்டுப் பால் சேர்த்து ஓரளவு வெந்தவுடன் வெயிட் போட்டுக் குழைய வேக விடவும். ஆறியதும் திறந்து ஜீனி சேர்த்து நன்கு மசிக்கவும்.  நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துப் போடவும். வாசனைக்கு ஏலப்பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.




7. திணைஅரிசி  காய்கறி உப்புமா:-

தேவையானவை:-

திணை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி
மிளகு சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும்
காய்கறிக் கலவை - 1 கப் ( காரட், பீன்ஸ், பட்டாணி )
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 இரண்டாக கீறவும்
கருவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-

திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும் மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை வதக்கவும். அதில் பச்சை  மிளகாய், கருவேப்பிலைகாய்கறிக் கலவையை வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...